Showing posts with label சாரதா. Show all posts
Showing posts with label சாரதா. Show all posts
5 comments

வேறெந்த நடிகைக்கும் முன்னால் ஊர்வசி என்ற பட்டம் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே விடை. ஒன்றல்ல...இரண்டல்ல.. மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசியவிருது என்றழைக்கப்படுகிறது.

தமிழில் இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் நிறையப்படங்கள் நடித்திருக்கிறார். அவர் வாங்கிய ஊர்வசி விருது இரண்டு மலையாளத்திலும் ஒன்று தெலுங்கிலும்.

இவர் நடித்த மிகப்பிரபலமான படமென்றால் அது துலாபாரம். அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்தப் படம் ஒரு துரதிருஷ்டமான பெண்ணின் கதையைச் சொல்வது. "பூஞ்சிட்டுக் கண்ணங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே" என்ற மிக அழகான பாடல் இசையரசி மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் குரலிலும் அருமையாக அமைந்திருக்கிறது.

இவருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் இசையரசி பாடியிருக்கிறார். அவைகளில் சில பாடல்களை இங்கே பார்க்கலாம்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த கவியரசர் பாடல் இது. குங்குமம் படத்தில் இடம் பெற்ற "தூங்காத கண்ணென்று ஒன்று" பாடலின் இனிமையை எப்படிச் சொல்வது. தூங்காத கண்ணைப் பற்றிச் சொல்லித் தூங்க வைக்க இசையரசியின் குரல் எப்படிப் பொருந்தி வருகிறது. கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.



அடுத்த பாடல் தெலுங்குப் பாடல். இதில் இசையரசியோடு மற்றொரு இசைக்குயிலான எஸ்.ஜானகி அவர்கள் பாடியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு இசை சக்கரவர்த்தி. இதே படத்தைத் தமிழில் கற்பூரதீபம் என்று எடுத்த பொழுது இதே பாட்டை கங்கையமரன் பயன்படுத்தியிருக்கிறார். அதில் இசையரசி பாடியிருப்பது நடிகை அம்பிகாவிற்காக.



அடுத்த பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில். அதுவும் தமிழில். நடிகர் திலகம் நடித்த ஞானவொளி திரைப்படத்தில் மணமேடை மலர்களுடன் தீபம் என்று காதலனோடு சுகித்துக் களிக்கும் பெண்ணிற்காக பாடியிருக்கிறார் இசையரசி பி.சுசீலா. விரகம், காதல், துன்பம், இன்பம் அனைத்தும் கலந்து பாடியிருக்கும் இந்தப் பாடலையும் கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்