Showing posts with label பூர்ணிமா ஜெயராமன். Show all posts
Showing posts with label பூர்ணிமா ஜெயராமன். Show all posts
7 comments

நடிகை பூர்ணிமா ஜெயராமனை...இப்பொழுது பாக்யராஜை யாரும் எளிதில் மறக்க முடியாது. பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த சிறப்பான நடிகை அவர். மும்பையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அவர் முதலில் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பயணங்கள் முடிவதில்லை படம் அவருக்குத் தமிழில் நட்சத்திரக் கதாநாயகியாக்கியது. முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்த அவர் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்.

அவருக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர் திரையுலகில் வந்த காலகட்டத்தில் இளையராஜா அறிமுக இசையமைப்பாளர் என்ற நிலை மாறி நட்சத்திர இசையமைப்பாளர் என்று நிலை பெற்று விட்ட காலகட்டம். மெல்லிசை மன்னரும் நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சங்கர் கணேஷ், டி.ராஜேந்தர் போன்றோரும் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அந்த பொழுதில் வந்த இரண்டு பாடல்களைப் பார்ப்போம் இந்தப் பதிவில்.

முதல் பாடல் தாலாட்டுப் பாட்டு. அதுவும் டி.ராஜேந்தர் இசையில். கிளிஞ்சல்கள் படத்திற்காக. சின்னச் சின்னக் கண்ணா என்ற இந்த அழகிய பாடல் மிக இனிமையானது. கேட்டால் கிறக்கும் இந்தப் பாடல் நம்மையும் சின்னக் கண்ணனாக்கும். குழந்தைக்காகப் பாடும் இந்தப் பாடலில் மறைபொருளாக காதலனுக்கும் காதல் சொல்வாள் நாயகி. ஆகத் தாலாட்டும் இருக்க வேண்டும். குறும்பு கொப்புளிக்கும் காதலும் இருக்க வேண்டும். ரொம்பவும் சிக்கலான இந்தச் சூழ்நிலையில் இசையிரசியின் குரல் விரசம் துளியும் இல்லாமல் காதலையும் தாய்மையையும் சொல்வதைக் கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காகத் தந்த நண்பர் குமரனுக்கும் நன்றி பல.




இரண்டாவது பாடல் இளையராஜாவின் இசையில். மலேசியா வாசுதேவன் உடன் பாடிய காதல் பாட்டு. அந்தக் காலத்துச் சிங்கப்பூரை இந்தப் பாடலில் கண்டு களிக்கலாம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக இசைஞானியின் இசையில் மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறார். சீனத்துப் பட்டு மேனி இளஞ்சிட்டு மேனி என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். பூர்ணிமா ஜெயராமனுக்கும் அழகாகக் குரல் பொருந்துவதையும் குழைவதையும் கேட்டு இரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காக youtubeல் தந்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்