இன்றைக்கு வேறு ஒரு பாட்டு பதிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இசை இன்பத்தில் சாரங்கி பதிவில் அண்ணாத்த ஜிரா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு. அதை பாத்துட்டு இன்னைக்கு கர்ணன் படத்தோட பாட்டு எல்லாத்தையும் திரும்ப பார்த்தேன்.
அப்படி பாக்கும் போது தான் இந்த பாட்டை திரும்பவும் ரசிச்சு கேட்டேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

அரண்மனையில் ராணியாரால் பாடப்படும் பாடல் என்பதால் பாடலின் ஒரு வித மிடுக்கு நிறம்பியிருக்கும். அது பாடல் படமாக்கப்பட்ட விதத்திலேயும் சரி,பாடலின் இசை அமைப்பிலும் சரி. விசுவனாதன் ராமமூர்த்தியின் இனிமையான மெலடி மெட்டில் சுசீலாவின் குரல் பாலில் தேன் குழைத்தது போல். அவருக்கே உரித்தான மென்மையான மற்றும் கம்பீரமான குரலில் அசத்தியிருப்பார்.
ஜிரா அண்ணா அந்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல இந்த படத்தின் பாடல் எல்லாவற்றிலும் சாரங்கி மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாட்டிலேயும் நடு நடுவே சாரங்கியின் இசையை கேட்கப்பெறலாம். படம் வட இந்தியாவில் அமையப்பெற்றிருப்பதால் (படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது) அந்த பாதிப்பை நாம் உணர்வதற்காக சிரத்தை எடுத்து இதனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விசுவனாதன் மற்றும் ராமமூர்த்தி.இந்த படத்திற்கு முன் இந்த அளவுக்கு சாரங்கியை வேறு எந்த படத்திலேயும் உபயோகித்திருப்பார்களா என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் விசுவனாதன் ராமமூர்த்தி, குறிப்பாக எம்.எஸ்.வியின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமில்லை. இப்பொழுது நாம் கேட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மெல்லிசை பாணியை ஆரம்பித்து வைத்தவர்களே அவர்கள் தான்.

பாடலின் கரு ஒன்றும் புதிதல்ல. வேலை பளு காரணமாக தன்னை சரியாக தலைவன் கவனிக்க மாட்டேன் என்கிறான் என்று தோழியிடம் முறையிடுகிறாள் தலைவி. முதல்வன் படத்தில் கூட சமீபத்தில் இது போன்ற ஒரு பாட்டு வந்ததே. எந்த இடம் போனாலும்,எந்த காலம் ஆனாலும் மனிதனின் அடிப்படை தேவைகளும் பிரச்சினைகளும் மாறாது என்று ஜிராவிடம் ஒரு முறை கதைத்தது தான் ஞாபகம் வருகிறது.

சரி நீங்கள் பாட்டை ரசியுங்கள்!! வேறொரு அழகான தமிழ் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்!!
வரட்டா??




படம் : கர்ணன்
இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

என்னுயிர் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே................. தோழி..

(என்னுயிர்)

அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ர வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்

(என்னுயிர்)

இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று ! தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ

(என்னுயிர்)

13 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ............ இந்தப்பாட்டுக்கு ஈடு உண்டா? இதுக்காகவே கர்ணன் வாங்கிவந்தேன்.
என்னா படம் என்னா படம்? நடிகர் தேர்வு எல்லாமே அப்படி ஒரு பொருத்தம்.

துரியோதனனின் நடிப்பும் நல்லா இருக்கும். நல்ல களையான முகம். அசோகனுக்கு ரொம்ப
நல்லாப் பொருந்திய வேடம்.

நன்றிப்பா. ரஸிச்சேன் மீண்டும் சிலமுறை.

SurveySan said...

சூப்பர் சுசீலா பாட்டுங்க இது.

கலக்கலா இருக்கு.

தொடர்ந்து கலக்குங்க.

கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று, எனக்கு பிடித்த சுசீலாவின் புதிய பாடல்.

வடுவூர் குமார் said...

இப்ப இருக்கிற கணினியில் வீடியோ "பளிச்" என்று சுத்தமாக இருக்கிறது... வீட்டுக்கு போய் தான் பார்க்க வேண்டும்.

CVR said...

@துளசி
வாங்க டீச்சர்
நீங்க சொல்வது முற்றிலும் சரி. அசோகன் எனக்கும் மிகப்பிடித்த நடிகர் , இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்துக்கும் மிக பொருத்தம்.
பாடலின் நடுவில் கூட பெரியதாக புன்னகைத்துக்கொண்டு வருவாரே!!
வருகைக்கு மிக்க நன்றி!! :-)

@சர்வேசன்
ஆமாம் தலைவரே!!!!

//கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று//
ஐயோ!!! இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு.

"தாய் அன்புக்கே ஈடேதம்மா??ஆகாயம் கூட அது போறாது,
தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போல அது ஆகாது"

இந்த வரியை கேட்கும் போது நான் மிகவும் சென்டி ஆகி விடுவேன்.
பாடல் முழுவதுமே என்னை மிகவும் உருக்கி விடும்!!!

அதை பற்றி கண்டிப்பாக பதிவிடுவேன்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி சர்வேசன்!! :-)

@வடுவூர் குமார்
என்ன பிரச்சினைன்னு தெரியலையே குமார்.
வீட்டிற்கு போய் பார்க்க முடிந்ததா?? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கர்ணன் படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டுமே மாஸ்டர் பீஸ் தான் CVR!

அதிலும் வடநாட்டு வாத்தியக் கருவிகள் சரளமா இடம் பெற்றிருக்கும்!
முக்கியமா சாரங்கி & ஷெனாய்!
பிஸ்மில்லா கான் வாசித்ததாய் கேள்விப்பட்டுள்ளேன்!

இரவும் நிலவும் வளரட்டுமே, நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே பாடல்!
- சுசீலாம்மா அப்படியே தேன் கலந்து ஊற்றி இருப்பார்கள் அந்தப் பாட்டில்...போதாதென்று பலாப்பழத்துக்கு ஷெனாய் இசை! ஆகா!

சர்வேசன் சுட்டிய பாட்டும் கண்கலங்க வைக்கும் பாட்டு, தனிமையில் கேட்டா ஒரு இரக்கம் சுரக்கும்!
அதுவும்
தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போல அது ஆகாது...
முத்தே என் முத்தாரமே...நீ பாடம்மா என்று இழுக்கும் போது, கண்களில் ஈரம்!

G.Ragavan said...

மிகவும் அருமையான பாடல். தமிழ்த்திரையிசையில் மெல்லிசை மன்னருக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. பல புதுமைகளைச் செய்தவர். தம்பட்டங்கள் இல்லை. எல்லாம் போகிற போக்கில் செய்திருக்கிறார். ஆகையால்தான் இசைஞானியும் இசைப்புயலும் ஏனைய இசையமைப்பாளர்களும் அவரை மதிப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பாட்டும் மிக இனிமையானது. தேனில் குரலெடுத்து இனிமைத் தமிழெடுத்து இசையரசி பாடுகையில் தான் மறந்து நாம் மறந்து உலகம்தாம் மறந்து மகிழ்கிறோம்.

Sud Gopal said...

ஆஹா..வாரே..வா..அற்புதமான பாடம்.

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கேன்னு ஒரு பாட்டு,இரவும் நிலவும்னு ஒரு டூயட் பாட்டு,உள்ளத்தில் நல்ல உள்ளம்னு ஒரு தத்துவப்பாட்டுன்னு முத்துகள் போன்ற பாடல்கள்.

எங்க அம்மாவுக்கு இந்தப்பாட்டு ரொம்பவும் பிடிக்கும்.அப்புறம் முன்னாள் தமிழக முதல்வரம்மாவின் செல்பேசி ரிங்டோனாய் "கண்கள் எங்கே" பாட்டு ரொம்ப நாளா இருந்ததா எங்கேயோ படிச்ச ஞாபகம்.

இங்கே நேயர் விருப்பம் எல்லாம் அனுமதிக்கப் படுமா??

கற்பூரமுல்லை ஒன்று - கேளடி கண்மணி

CVR said...

@கே.ஆர்.எஸ்
நீங்க சொல்லுறது சரிதான் அண்ணாத்த!!
இங்கு பின்னூட்டிய அனைவருமே கர்ணன் பட பாடல்களை மெச்சுபவர்களாவே இருக்கிறார்கள்.
"கற்பூர பொம்மை ஒன்று" என்னை மிகவும் பாடல்களில் ஒன்று. உங்களுக்கும் அது பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி!! :-)

@ஜிரா
நீங்க சொன்னா அந்த பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது தல!! :-)

@சுதர்சன்
வாங்க சுதர்சன்!
நிறைய தகவல்கள் கொடுத்திருக்கீங்களே!!
மிக்க நன்றி.
சர்வேசனுடைய பின்னூட்டம் பாக்கும் போதே "கற்பூர பொம்மை ஒன்று" பதிவிடனும்னு முடிவு செஞ்சாச்சு!!
ஏன்னா அந்த பாட்டு எனக்கும் மிக பிடித்த பாட்டு!! :-)

வெற்றி said...

CVR,
அருமையான பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

G.Ragavan said...

// இங்கே நேயர் விருப்பம் எல்லாம் அனுமதிக்கப் படுமா??

கற்பூரமுல்லை ஒன்று - கேளடி கண்மணி //

என்ன கேள்வி ஓமப்பொடியாரே. இதெல்லாம் கேக்கலாமா? கண்டிப்பா உண்டு. உங்க விருப்பத்த ஏற்கனவே சிவிஆர் எடுத்துக்கிட்டாரே. :)

வல்லிசிம்ஹன் said...

முதன் முதலாக வட இந்திய சங்கீதத்தைப் பாடல்களில் அமைத்தவர் மெல்லிசை மன்னர்.

இந்தப் பாடல்,அந்தப் படப்பிடிப்பு,நடிகர்களின் முக பாவம் எதுவுமே மறக்க முடியாது.அப்படியொரு நெகிழ்வு. துரியோதனனையும் ரசிக்க வைத்தவர் அசோகன். மிகச் சிறந்த தமிழ் ஆளுமை. சுசீலாம்மாவின் கண்ணுக்குக் குலமேது பாட்டும் ரொம்ப நல்லா இருக்கும். நன்றி சிவிஆர்.

CVR said...

@வல்லிசிம்ஹன்
வாங்க வல்லிசிம்ஹன்!!
உங்களை போலவே எங்களுக்கும் இந்த படத்தை பற்றியும்,அதன் பாடல்களை பற்றியும் இனிமையான நினைவுகள் தான் மனதில் நிறம்பி இருக்கிறது!! :-)

வட இந்திய தேஷ் ராகத்தை உள்ளத்தில் நல்ல உள்ளம் பாட்டுல விஸ்வநாதன் பயன்படுத்துனாருன்னு ஜிரா அண்ணா கூட என் கிட்ட சொல்லியிருக்காறு!! அந்த பாட்டிலேயும் மிக அழகாக சாரங்கி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்!! :-)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

rajesh said...

கர்ணன் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
சுசீலாவின் குரலில் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
அது தான் சுசீலா

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே கண்ட போதே சென்றன அங்கே என்று தேவிகா சொன்னாலும், இந்த பாடல் எங்கே நம் செவிகள் செல்வது
அங்கே(உறுதி)
அப்படி ஒரு இனிமையான மெட்டும், கவிஞரின் வரிகளும், தேனினும் இனிய சுசீலாவின் குரலும் இந்த கானத்தை தேவகானமாக்கியது என்றால் அது மிகையில்லை

நன்றிகள் பல‌

Post a Comment